Friday, April 6, 2007

விதண்டாவாதத்திற்க்கு தீர்வு உண்டா?

எல்லாம் வல்ல ஏக இறையோன் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்.

அன்பு தமிழ் நெஞ்சங்களே!

சகோதரர் நேசக்குமார் அவர்கள் என்னிடத்தில் இஸ்லாம் குறித்து 5 வினாக்கள் என்னிடத்தில் கேட்டிருந்தார். எனக்கு தெரிந்த வகையில் அவைகளுக்கு பதில் கூறியிருந்தேன். எனது பதில்கள் அனைத்தும் மிகச் சரியானதே என்று நான் வாதாடிட மாட்டேன். ஏனென்றால், நமது அறிவுக்கு, சக்திக்கு, சிந்தனைக்கு எல்லாம் ஒரு வரையறையிருக்கிறது. இந்த வரையறைகள் ஒரு சிலருக்கு சற்று அதிகமாகவும், சிலருக்கு சற்று குறைவாகவும் இருக்கிறது. இந்த அடிப்படையில் மனிதன் என்பவன் தவறுகள் செய்யக் கூடியவனே, இறைவன் ஒருவனே இத்தகைய குறைபாடுகளுக்கு அப்பாற்பட்டவன் என்னும் நம்பிக்கையுடையவன் நான். எனவே எனது சிந்தனைகளில், ஆய்வில், கருத்துக்களில் தவறுகள் வர ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த ஐயத்தால் தான் நான் ஒவ்வொரு முறையும் எனது பதிவகளின் இறுதியில்,"எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்", என எழுதுகிறேன். ஒருவர் அவரது தவறுகளை ஏற்றுக் கொள்வது என்பது அவருக்கு சிறுமையோ அல்லது கேவலமோ அல்ல, மாறாக அவரின் பெருந்தன்மையும், தைரியமும், சிறந்த பண்பும் ஆகும்.
இந்த அடிப்படைகளில், சகோதரர் நேசக்குமார் ஏதும் தவறுகளை கூறி இருப்பாரேயானால், அவற்றை ஏற்பதற்கு நான் எவ்வித தயக்கமும் காட்டியிருக்க மாட்டேன். ஆனால் அவரது மறுப்புகள் அனைத்தும், அவரது மனமுரண்டை தான் காட்டுகிறது, எதிர்க்க வேண்டும் என்பதற்காக எனது கருத்துக்களை அவரது விருப்பத்திற்கு ஏற்ப வளைப்பது அவரது நேர்மையற்ற தனத்தை பறைசாற்றுகிறது.
நான் பொய்யுரைப்பதாகவும், தடுமாறுவதாகவும் கூறும் சகோதரர் நேசக்குமார் இதன் மூலம், தான் யார்? தனது ஆய்வுகளின் தரமும், நேர்மையும் எத்தகையது? தனது கருத்துக்களின் உண்மை நிலை எத்தகையது? என்பதை நடுநிலையாளர்கள் உணர்த்திட வைத்திருக்கிறார். எல்லா புகழும் இறைவனுக்கே!
அன்பர்களே! இஸ்லாத்தின் கொள்கை என்ன? என்பதனை மீண்டும் ஒருமுறை நினைவூட்ட ஆசைப்படுகிறேன்.1) இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை, "வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே அன்றி வேறில்லை. முஹம்மது நபி (இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!) அவர்கள் இறைவனின் திருத் தூதர் ஆவார்கள்.
2) இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் இரண்டு மட்டுமே ஆதாரங்களாகும். ஒன்று திருக்குர்ஆன் மற்றொன்று ஹதீஸ் (முஹம்மது நபி [இறை சாந்தி அவர்கள் மீது நிலவட்டுமாக!] அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்). இவ்விரண்டில் ஒன்றை ஏற்று மற்றொன்றை நிராகரிப்பது இஸ்லாம் அல்ல. இரண்டையும் சேர்த்து அடிப்படை ஆதாரங்களாக ஏற்ப்பது தான் இஸ்லாமாகும். திருக்குர்ஆனில் இறைவன், தனக்கு வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடக்க சொல்லும் போதெல்லாம், இறைத்தூதர் அவர்களுக்கும் வழிப்பட்டு, கட்டுப்பட்டு நடக்க சேர்த்து கூறும் ஏராளமான வசனங்கள் காணக்கிடக்கின்றன். அதனை மேலும் வலுவூட்டும் விதத்தில் 33வது அத்தியாயத்தில் 21வது வசனத்தில், "இறைவனின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து இறைவனை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக இறைவனின் தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி இருக்கிறது" என்று கூறுகிறான். எனவே, எங்களின் மனோயிச்சைப்படி நாங்கள் இரண்டை ஆதாரமாக எடுக்கவில்லை. மாறாக! குர்ஆனின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே, இறைவனின் கட்டளையால் தான் எடுத்துள்ளோம்.
3)இஸ்லாத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், வழிகாட்டல்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதால், இவ்விரண்டை கொண்டே இஸ்லாமிய ஷரீயத்து உருவாக்கப்பட்டுள்ளது.
4) திருக்குர்ஆனில் எல்லா கட்டளைகளும் கூறப்பட்டுள்ளது. அந்த கடமைகளை எப்படி நிறைவேற்றுவது? அதற்கான சட்டங்கள் என்னென்ன? என்னும் விளக்கங்கள் ஹதீஸிலிருந்தே பெறுகிறோம். உதாரணத்திறக்கு, குர்ஆனில் தொழ இறைவன் கட்டளைவிடும் வசனங்கள் இடம் பெறுகிறது. எப்படி தொழுவது? எத்தனை முறை தொழுவது? அதற்குரிய நேரங்கள் என்னென்ன? தொழுகை செய்வதற்க்கு அவசியமானவைகள் என்னென்? எப்போது, என்னென்ன சூழ்நிலைகளில் தொழ கூடாது? இப்படி தொழுகையின் விளக்கங்கள் ஹதீஸிலிருந்தே பெறுகிறோம். எனவே, குர்ஆனில் கட்டளைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்த வேண்டிய விளக்கங்கள் ஹதீஸில் தான் உள்ளன.
இப்போது, சொல்லுங்கள் எங்கே எனது பதில்களில் பொய் இருக்கிறது? எங்கே தடுமாற்றம் இருக்கிறது? எங்கே குழப்பங்கள் இருக்கிறது? நாங்கள் ஹதீஸையும் பின்பற்றுவதால் குர்ஆனுக்கு முரண்பட்டு விட்டோமா?ஆக நாங்கள் தெளிவாக, முரண்பாடில்லாமல் சரியாகவே பின்பற்றி கொண்டிருக்கிறோம்.
அடுத்து, அனைத்து முஸ்லிம்களும் ஹதீஸை ஏற்று கொள்வதில் ஒரே கருத்துடையவர்களாக இருக்கிறார்களா? என்ற ஒரு கேள்வியை வைத்து இஸ்லாத்தில் குழப்பங்கள் இருப்பதாக காட்ட முன் வருகிறார் சகோதரர் நேசக்குமார். ஐயா, முஸ்லிம் பெயர் வைத்து கொண்டு, அவரது மனோயிச்சைப்படி கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்து அதை இஸ்லாமாக சிலர் காட்டுவதால், இஸ்லாத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன,எனவே இஸ்லாத்தில் குழப்பங்களும், தடுமாற்றங்களும் நிறைந்திருக்கின்றன என்று சொல்வது அறிவுடைய வாதாமா? நான் பின்பற்றும் கொள்கையில், கோட்பாடில் குழப்பங்களோ, சந்தேகங்களோ இருந்தால் அதுபற்றி கேளுங்கள்? அதில் நியாயம் இருக்கிறது. அல்லது நான் பின்பற்றும் கொள்கையும் நன்கு படித்தறிந்து விட்டு, எங்களது கொள்கைக்கு முரண்பாடான கொள்கையுடையவர்களின் கொள்கையும் நன்கு படித்தறிந்து விட்டு, அவர்களுடைய கோட்பாடில் தான் உண்மையிருக்கிறது எனது கோட்பாடில் உண்மையில்லை என்று வாதிடுங்கள், அதில் நியாயமிருக்கிறது. ஒரு கோட்பாடிலிருந்து வித்தியாசப்பட்டு இன்னொரு துணைக் கோட்பாடுகள் உருவாக்குவதை மனிதர்களால் தடுக்க முடியாது. அதற்காக அந்த கோட்பாடு குழப்பாமானது என்று கூறுவது அபத்தமான வாதமாகும். இரண்டையும் நன்கு படித்து விட்டு முதல் கோட்பாடு சரியானதா? அல்லது அதிலிருந்து பிரிந்த துணைக் கோட்பாடு சரியானதா? என்று வாதிட்டால், அல்லது இரண்டுமே இன்னின்ன காரணங்களால் தவறானவை என்று வாதிட்டால், அது தான் நியாயமான வாதமாகும்.
இப்போது குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் இருப்பது யார்? மனமுரண்டாக விதண்டா வாதம் செய்பவர் யார்? காழப்புணர்வால் களங்கம் கற்பிக்க முயல்பவர் யார்? என்று நடுநிலையான சிந்தனையாளர்கள் அறிந்து கொள்வார்கள்.
எனது கருத்துக்களில் உண்மையிருக்குமானால், புழனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே! தவறுகள் இருந்தால் அது எனது சிறுமதியால் ஏற்பட்ட தவறாகும். அந்த தவறை சுட்டிகாட்டும் பட்சத்தில், உண்மையிருந்தால் என்னை திருத்தி கொள்வேன்.

நன்றி வாழ்த்துக்களுடன்
சகோதரன் நெய்னா முஹம்மது

No comments: